×

கொள்ளிடத்தில் பன்றிகளை பிடிக்கும் பணி தீவிரம்

கொள்ளிடம், நவ.22: கொள்ளிடம் பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. கொள்ளிடம் அக்ரஹாரத்தெரு, மெயின்ரோடு உள்ளிட்ட முக்கியமான குடியிருப்பு பகுதிகளில் பன்றிகள் சுற்றி திரிவதாகவும், அதனை உடனடியாக பிடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் சார்பில் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கையினை ஏற்று கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சன் உத்தரவின்பேரில் ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி செயலாளர் செந்தில் மற்றும் ஊழியர்கள், கொள்ளிடத்தில் உள்ள தெருக்கள் மற்றுக் குடியிருப்புகள்தோறும் கையில் வலையுடன் சென்று பன்றிகளை விரட்டி விரட்டி பிடித்தனர். பன்றி பிடிப்பவர்களைக் கண்டதும் ஓட்டம் பிடித்த பன்றிகளை பின்தொடர்ந்து விரட்டிப் பிடித்து கால்களை கட்டி உயிருடன் மினி லாரியில் ஏற்றினர். இந்த பன்றிகள் வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து பன்றிகளை பிடிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :
× RELATED பாலாலய நிகழ்ச்சியுடன் துவக்கம்...