கொள்ளிடம், நவ.22: கொள்ளிடத்தில் 7 வருடமாகப் மூடியே கிடந்த வேளாண் உதவி இயக்குநர் அலுவலக கேட் நேற்று தினகரன் செய்தி எதிரொலியால் திறக்கப்பட்டது. கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்துக்குச் செல்லும் நுழைவாயில் கேட் கடந்த 7 வருடங்களாக பூட்டப்பட்டு மூடியே கிடந்தது. இதனால் விவசாயிகள் அலுவலகத்துக்கு எளிதில் சென்று வர முடியவில்லை. உரம், மற்றும் விதைகள், பூச்சிமருந்துகளை எளிதில் சென்று வாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். வேளாண் கிடங்குக்கு அரசு சார்பில் அனுப்பி வைக்கப்படும் வேளாண் இடுபொருட்கள் மற்றும் நெல் விதை மற்றும் உரமூட்டைகளையும், கிடங்குக்கு எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இது குறித்து விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் சார்பில் கோரிக்கை விடுத்தும் நுழைவாயில் கேட் திறக்கவில்லை.
இது குறித்து விவசாயிகள் சங்கத்துணைத் தலைவர் பாக்யராஜ் கூறுகையில் ஒரு வாரத்துக்குள் நுழைவாயில் கேட்டை திறக்கவில்லை என்றால் விவசாயிகள் சார்பில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தார். இச்செய்தி கடந்த 20ம் தேதி தினகரனில் செய்தியாக வெளியானது.
இந்நிலையில் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் வேளாண் அலுவலக நுழைவாயில் கேட்டை அதிகாரிகள் நேற்று திறந்தனர். ஏழு ஆண்டுகளாகப் பூட்டியே கிடந்த கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தின் நுழைவாயில் கேட் தினகரன் செய்தி எதிரொலியால் நேற்று திறக்கப்பட்டதற்கு விவசாயிகள் சார்பில் விவசாயிகள் சங்க துணை செயலாளர் பாக்யராஜ் நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்தார்