வேலூர், நவ.22: வேலூர் பாலாற்றில் மணலை அள்ளி கலெக்டர் அலுவலகம் அருகிலேயே பதுக்கி விற்கும் ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சத்துவாச்சாரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் பாலாற்றில் ஒரு இடத்தில் மட்டும் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ள குவாரி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், பாலாற்றில் விருதம்பட்டு, பிரம்மபுரம், காங்கேயநல்லூர், விரிஞ்சிபுரம், பொய்கை, மாதனூர் என மாவட்டம் முழுவதுமே மணல் திருட்டுத்தனமாக அள்ளப்பட்டு கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கு காவல்துறையின் சில அதிகாரிகளும், துறைரீதியான அதிகாரிகளும் உடந்தையாக உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. அதற்கேற்ப வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகிலேயே பாலாற்றில் மணலை அள்ளி அங்கேயே சலித்து ஓரிடத்தில் குவியல், குவியலாக பதுக்கி வைத்து வெளிப்படையாகவே விற்பனை செய்யப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர் சத்துவாச்சாரி பகுதி மக்கள். எனவே, பாலாற்றில் நடைபெறும் தொடர் மணல் கொள்ளைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.