×

திருவண்ணாமலையில் சுகாதாரமற்ற பிள்ளைக்குளத்தை சீரமைக்க வேண்டும் பக்தர்கள் கோரிக்கை

திருவண்ணாமலை, நவ.22: திருவண்ணாமலையில் சுகாதாரமற்ற நிலையில் காணப்படும் பிள்ளைக்குளத்தை புதுப்பொலிவு பெற செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலைக்கு நாள்தோறும் திரளான பக்தர்கள் இங்குள்ள அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனை தரிசிக்கவும், வியாபார நிமித்தமாகவும் வந்து செல்கின்றனர்.  புகழ்மிக்க திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் எண்ணற்ற புனித குளங்கள் உள்ளன. இவற்றில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது பிள்ளைக்குளம். திருவண்ணாமலை- செங்கம் சாலையில், பே கோபுரம் அருகே குடியிருப்பின் நடுவில் இக்குளம் அமைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழாவின் போது பக்தர்கள் இக்குளத்தில் நீராடி விட்டுதான் கிரிவலம் செல்வார்கள். சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக பிள்ளைக்குளத்துக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.  ஆனால், இக்குளம் செடி, கொடிகள் வளர்ந்தும் பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்தும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. தகுந்த பராமரிப்பில்லாமல் குப்பை மேடாக காட்சியளிக்கிறது.இந்த குளத்தில் நீராடினால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். இக்குளத்தில் நீராடி விட்டு சென்றவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததால் இக்குளத்துக்கு பிள்ளைக்குளம் என்று பெயர் வந்தது. எனவே இக்குளத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்றி புதுப்பொலிவு பெறச்செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இக்குளமானது நாளடைவில் தூர்ந்து குளம் இருந்த இடமே தெரியாமல் போய்விடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேப்ஷன்
திருவண்ணாமலை பிள்ளைக்குளத்தில் செடி, கொடிகள் வளர்ந்தும் பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்தும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.

Tags : Pilgrims ,children ,Thiruvannamalai ,pool ,
× RELATED செங்கத்தில் வெறிநாய் கடித்து 10 குழந்தைகள் காயம்