போளூர், நவ.22: போளூர் ஒன்றிய அளவில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குகான விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டிகள் போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. தலைமையாசிரியர் பா.தாமரைச்செல்வி தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் பி.கே.வெங்கடேசன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குநர் ர.ராஜசெல்வகுமார் வரவேற்றார்.மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அ.ராஜ்குமார் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். போட்டி விதிமுறைகள் குறித்து பெண்கள் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியர் ர.ராமனுஜம் விளக்கினார்.
இப்போட்டிகளில் போளூர் ஒன்றித்திற்குட்பட்ட 20 பள்ளிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கைப்பந்து எறிதல், ஓட்டப் பந்தயம் உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சி.ஜெயவேலு, உடற்கல்வி ஆசிரியர்கள் ரா.திருமலை ராஜன், ந.நடராஜன், ம.மலர்செல்வி, ஸ்டெல்லாமேரி உட்பட பலர் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் கே.ஏழுமலை நன்றி கூறினார்.