ஆரணி, நவ.22: ஆரணி அருகே டிப்ளமோ நர்சிங் படித்து விட்டு, வீட்டில் கிளினிக் அமைத்து ஆங்கில மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். ஆரணி அடுத்த ஈபி நகர் ராட்டிணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாபு வைத்து நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வருகிறார். மேலும், ஆரணி அடுத்த முள்ளிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் நர்சிங் இன்ஸ்டியூட்டில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
இந்நிலையில், பாபு டிப்ளமோ நர்சிங் மட்டுமே படித்து விட்டு, ஊருக்குள் எம்பிபிஎஸ் படித்ததாக கூறி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் ஆரணி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் நந்தினி மற்றும் மருத்துவ குழுவினர் நேற்று அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர்.
அதில், பாபு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருவது தெரிந்தது. இதையடுத்து, அங்கிருந்த மருந்து, மாத்திரை, ஊசி போன்றவைகளை பறிமுதல் செய்தார். பின்னர், பாபுவை ஆரணி தாலுகா போலீசில் ஒப்படைத்து புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.