வேன் மோதி வாலிபர் பலி

குளத்தூர்,நவ.22: குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் பைக் மீது வேன் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். குளத்தூர் அடுத்த பல்லாகுளம் கிராமத்தை சேர்ந்த மூக்காண்டி மகன் தெய்வேந்திரன் (32). குளத்தூர் பிரகாசபுரம் தெருவில் வசித்துவந்த நிலையில் தருவைகுளம் அருகேயுள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி வசுமதி (28).  தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. மீண்டும் கர்ப்பமான வசுமதியை பிரசவத்திற்காக குளத்தூர் அரசு மருத்துவமனையில் நேற்று காலை சேர்த்த தெய்வேந்திரன், அங்கிருந்து பைக்கில் வேலைக்கு சென்றார். மாலை அதே பைக்கில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக திரும்பிக்கொண்டிருந்தார். குளத்தூர் நந்தவனபகுதியில் வந்தபோது அவ்வழியாக வந்த தனியார் கம்பெனி வேன், இவரது பைக் மீது மோதியது. இதில் தெய்வேந்திரன் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து விரைந்துவந்த குளத்தூர் போலீசார், தெய்வேந்திரனின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: