ஓமலூர், நவ.22: ஓமலூர் அருகே குடிமராமத்து பணி முடிந்த ஏரியில், ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. சேலம் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான ஏரிகளில், குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஓமலூரை அடுத்துள்ள தைலாக்கவுண்டனூர் ஏரி, குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டது. இந்த பணிகளை கலெக்டர் ராமன், அப்பகுதியை சேர்ந்த குறிஞ்சி உழவர் மன்றத்திற்கு வழங்கினார். இதனை தொடர்ந்து விவசாயிகள் ஒருங்கிணைந்து ஏரியை முழுமையாக தூர்வாரி, தூய்மையாக பணிகளை செய்து முடித்தனர். இதனையடுத்து குடிமராமத்து பணிகள் செய்த ஏரியை சுற்றி, மரக்கன்றுகள் நடுவதற்கு விவசாயிகள் ஏற்பாடு செய்தனர்.
மேலும், ஏரியை சுற்றிலும் மரங்களை நட்டு பராமரிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில், தைலாக்கவுண்டனூர் ஏரியை சுற்றிலும் ஆயிரம் மரக்கன்றுகளை நடும் விழாவை மேட்டூர் எம்எல்ஏ செம்மலை துவக்கி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மாலினி, உதவி பொறியாளர் சங்கர்கணேஷ், முன்னாள் சேர்மன் சந்திரசேகரன், தாய் அறக்கட்டளை உறுப்பினர் நந்தினி மற்றும் குறிஞ்சி உழவர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.