சேலம் அருகே கழுத்தை அறுத்து காதல் மனைவியை கொன்ற கணவர் பரபரப்பு வாக்குமூலம்

சேலம், நவ.22: காதல் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்தது ஏன்? என்பது  குறித்து போலீசாரிடம் கணவர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். சேலம் வீராணம் அருகேயுள்ள மன்னார்பாளையத்தை சேர்ந்தவர் கோபி (29). இவருடைய மனைவி மோகனேஸ்வரி (22). இவர்கள் இரண்டு பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கோவையில் வசித்து வந்தனர். இதனிடையே கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கோபியை விட்டு பிரிந்து மோகனேஸ்வரி சேலத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். சேலம் டவுனில் உள்ள ஜவுளி கடை ஒன்றிலும் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10ம் தேதி இரவு பணியை முடித்துக்கொண்டு திரும்பிய மோகனேஸ்வரி அல்லிக்குட்டை அருகே கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து வீராணம் போலீசார் விசாரித்ததில் கோபி தான் கொலை செய்தார் என உறுதிப்படுத்தினர்.

இந்த வழக்கு தொடர்பாக கோபியின் கூட்டாளிகள் 4பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சம்பவம் நடந்த அன்று ஜவுளி கடையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்ட மோகனேஸ்வரி ஆட்டோவில் ஏறியுள்ளார். அதே ஆட்டோவில் கோபியின் கூட்டாளிகளில் ஒருவர் ஏறினார். அந்த ஆட்டோவை டூவீலரில் மற்றவர்கள் பின்தொடர்ந்து வந்து, அல்லிக்குட்டை பகுதியில் இறங்கிய மோகனேஸ்வரியை, கத்தியால் கழுத்தை அறுத்து கோபி கொலை செய்தார். மேலும், கோபிக்கு மாற்று ஆடை கொடுத்து கோவைக்கு கூட்டாளிகள் அனுப்பி வைத்துள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதனிடையே கோபி கோவை கோர்ட்டில் சரணடைந்தார். அவரை 3நாட்கள் காவலில் எடுத்து வீராணம் விசாரித்து வருகின்றனர். கோபி போலீசில் அளித்த வாக்குமூலத்தில், நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். ஆரம்பத்தில் சொல் பேச்சு கேட்ட மோகனேஸ்வரியின் போக்கில் பின்னர் மாற்றம் ஏற்பட்டது. என்னை உதாசீனப் படுத்தினாள். என்னைவிட்டு பிரிந்து இங்கு வந்துவிட்டாள். குடும்பம் நடத்த வா என பலமுறை அழைத்தும் வரமறுத்து விட்டாள். இதனால் அவள் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து கொலை செய்ய முடிவு செய்து நண்பர்கள் உதவியுடன் அவளை கொலை செய்தேன்’ என கூறியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கோபியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: