×

தேனி மாவட்டத்தில் உரம் விற்பனையில் முறைகேடு 6 கடை விற்பனை உரிமம் ரத்து

தேனி, நவ. 22: தேனி மாவட்டத்தில் உரம் விற்பனையில் முறைகேடு செய்த ஆறு சில்லரை விற்பனை கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜவகிரிபாய் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: மத்திய அரசு உணவுப்பொருட்களுக்கு அடுத்தபடியாக உரங்களுக்கு அதிகளவு மானியம் வழங்குகிறது. உரத்திற்கு வழங்கப்படும் மானியத்தை அனைத்து விவசாயிகளும் பெறுவதை உறுதி செய்யும் வகையிலும், விவசாயம் அல்லாத பிறபயன்பாடுகளுக்கு மானிய உரங்கள் வழங்கப்படுவதை தடுக்கவும், ‛விற்பனை முனை கருவி’ என்று அழைக்கப்படும் ‛பாய்ண்ட் ஆப் சேல்’ என்ற கருவி அனைத்து சில்லரை விற்பனை நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கருவியில் விவசாயிகளின் ஆதார் எண், விரல் ரேகையினை பதிவு செய்த பின்னர் தான் உரம் விற்க வேண்டும். இணையதளம் மூலம் இணைக்கப்பட்ட கருவி ஒவ்வொரு சில்லரை விற்பனையாளரும் உரங்களை விற்ற விபரம், இருப்பு விவரங்களை துல்லியமாக காட்டி கொடுத்து விடும்.
இந்த கருவி மூலம் சில்லரை உரம் விற்பனை நடைபெறுகிறதா என இணை இயக்குனர் ஜவகிரிபாய், தரக்கட்டுப்பாடு வேளாண்மை அலுவலர் மணிகண்ட பிரசன்னா ஆகியோர் தலைமையில் மாவட்டம் முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் மூலம் உரம் விற்பனை முனைய கருவி காட்டிய இருப்பின் அளவிற்கும், கடைகளில் இருந்த உரங்களின் இருப்பின் அளவிற்கும் பெரும் வித்தியாசம் இருந்த ஆறு கடைகளுக்கு உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்ற கடைகளில் உரங்களின் இருப்பின் அளவு, விலை விவரங்களை விவசாயிகளுக்கு தெரியும் வகையில் துல்லியமாக எழுதி வைக்க அறிவுறுத்தப்பட்டது.
தேனி மாவட்டத்தில் நடப்பு மாதத்திற்கு தேவையான யூரியா 1374 டன், டிஏபி 1240 டன், பொட்டாஸ் 815 டன், கலப்பு உரங்கள் 4219 டன், தனியார் மற்றும்் கூட்டுறவு நிறுவனங்களில் இருப்பு உள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Malik 6 ,Theni district ,
× RELATED கோம்பை பகுதியில் வாகன...