வாடிப்பட்டி, நவ.22: சமயநல்லூர் உட்கோட்டப்பகுதியில் டூவீலரில் சென்று தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார், இருவரிடமிருந்து 38 சவரன் தங்க நகை மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
சமயநல்லூர் காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட வாடிப்பட்டி, அலங்காநல்லூர், நாகமலை புதுக்கோட்டை பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சாலையில் நடந்துசெல்லும் பெண்களிடம் மோட்டார் பைக்கில் வரும் மர்மநபர்கள் தங்கநகைகளை வழிப்பறிசெய்து வந்
தனர்.
அதனை தொடர்ந்து வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட எஸ்.பி., மணிவண்ணன் உத்தரவின் பேரில், சமயநல்லூர் டி.எஸ்.பி. ஆரோக்கிய ஆனந்தராஜ் ஆலோசனையின்படி சமயநல்லூர் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் சப்இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேஷ், ஆனந்தகுமார், ஏட்டுகள் டார்வின், மகேந்திரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடிவந்
தனர்.
இந்நிலையில் நேற்று தோடனேரி பிரிவில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் மோட்டார் பைக்கிள் வந்த 2 வாலிபர்களை மறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இருவரும் முன்னுக்குபின் முரனாக பதில்கூறவே, சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இருவரும் அலங்காநல்லூர் கோட்டைமேட்டை சேர்ந்த ராமர் மகன் ஜெயகிருஷ்ணன் (23), குறவன்குளத்தை சேர்ந்த மணிகண்டன் மகன் சூரியக்குமார் (22) என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து வாடிப்பட்டி, அலங்காநல்லூர், நாகமலைபுதுக்கோட்டை பகுதிகளில் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டனர். இருவரும் கொடுத்த தகவலின் பேரில் 38 சவரன் தங்க நகைகளையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.