பழநி, நவ. 22: பழநி அருகே அக்கமநாயக்கன்புதூரில் கோயில் நிலத்தில் அமைக்கப்பட்ட செங்கல்சூளையை அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.
பழநி அருகே அ.கலையம்புத்தூரில் அழகுநாச்சியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 3 தலைமமுறைகளக பரமசிவம் என்பவரது பரம்பரையினர் பூஜை செய்து வருகின்றனர்.
பரமசிவம் குடும்பத்தாரின் வாழ்வாதாரத்திற்காக பழநி அருகே அக்கமநாயக்கன்புதூரில் 4 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் விவசாயம் செய்து அதன்மூலம் வரும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது அந்நிலத்தில் பரமசிவம் குடும்பத்தினர் செங்கல்சூளை அமைத்துள்ளனர். இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார்கள் சென்றது. இப்புகார்களின் அடிப்படையில் நேற்று திண்டுக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.அங்கு விதிமுறைகளுக்கு முரணாக இருந்ததாகக் கூறி செங்கல்சூளைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர்.இதுகுறித்து பரமசிவம் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 3 தலைமுறைகளாக இந்நிலத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே கோயிலை பராமரித்து வந்தோம். போதிய மழை இல்லாததால் செங்கல்சூளை அமைத்தோம். எங்களின் வாழ்வாதாரமாக உள்ள அந்த இடத்தை அறநிலையத்துறை மீண்டும் எங்களிடமே ஒப்படைக்க வேண்டும். இது தொடர்பாக சட்ட ரீதியான முயற்சிகள் மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.