செங்கல்பட்டு, நவ. 22: செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகர் தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக சார்பில் நடக்கவுள்ள மகளிர் மாநாடு மற்றும் உள்ளாட்சி தேர்தல் வியூகம் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.பாமக துணை பொது செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச் செயலாளர்கள் பொன். கங்காதரன், இரா.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ சக்தி கமலம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு, உள்ளாட்சி தேர்தலில் திறம்பட பணியாற்றி வெற்றிபெற வேண்டும்.
அவரவர் பகுதியில் புதிய உறுப்பினர்களை சேர்த்து கட்சியை வலுப்பெற களப்பணி ஆற்ற வேண்டும். பூம்புகாரில் வரும் 4ம் தேதி நடைபெறும் மகளிர் மாநாட்டில் ஏராளமானோர் பங்கு பெற வேண்டும் என்றனர்.காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர் காரணை இராதாகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஏகாம்பரம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.