×

நீலகிரியில் மேக மூட்டம், சாரல் மழை

ஊட்டி, நவ.22:ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மேக மூட்டம் மற்றும் அவ்வப்போது பெய்யும் சாரல் மழையால் குளிர் அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் சில நாட்கள் மழை குறைந்து நீர் பனி காணப்பட்டது. அதே சமயம் பகல் நேரங்களில் வெயில் அதிகமாக காணப்பட்டது. ஆனால், கடந்த ஒரு வாரமாக மீண்டும் மழை துவங்கியுள்ளது. எந்நேரமும் மேக மூட்டம் காணப்படுகிறது. அவ்வப்போது சாரல் மழையும், சில சமயங்களில் கன மழை பெய்து வருகிறது.
 ஊட்டியில் மட்டுமின்றி, மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இதே காலநிலை நீடிக்கிறது. இதனால், தற்போது ஊட்டியில் குளிர் அதிகரித்துள்ளது. குளிரால் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த மாறுபட்ட காலநிலையால், பொதுமக்கள் மட்டுமின்றி, விவசாய பயிர்களும் பாதித்துள்ளன.

மேலும், அதிகாலையில் கடும் மேக மூட்டம் காணப்படுவதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக சமவெளிப் பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா வாகன ஓட்டிகள் இந்த கடும் மேக மூட்டத்திற்கிடையே வாகனங்களை இயக்க முடியாமல் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். ஒரு வாரமாக குளிர் அதிகமாக காணப்படுவதால், சுற்றுலா பயணிகள் வருகையும் மிகவும் குறைந்தே காணப்படுகிறது.

Tags : Nilgiris ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...