வீடு புகுந்து குழந்தைகளை தாக்கிய 2 வாலிபர் கைது

புதுச்சேரி,  நவ. 22:  கோவிந்தசாலையில் குடிபோதையில் வீடு புகுந்து குழந்தைகளை தாக்கிய 2  வாலிபரை பெரியகடை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  புதுவை, கோவிந்தசாலை, அந்தோணியார் கோயில் வீதி, ராஜீவ்காந்தி  குடியிருப்பில் வசிப்பவர் திலகர் (43), டெய்லர். இவரது மனைவி மலர் (40).  தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று தம்பதியர்  வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் வீட்டில் அவரது மகள் ரம்யா  (13), மகன் ஜெய்யும் (10) தனியாக இருந்துள்ளார்.

 அப்போது அந்த வழியாக  குடிபோதையில் வந்த கோவிந்தசாலையை சேர்ந்த ஆனந்த், செந்தில் ஆகியோர்  வீட்டில் தனியாக இருந்த மலரின் குழந்தைகளை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல்  விடுத்தார்களாம். இதுகுறித்து பெரியகடை காவல் நிலையத்தில் மலர் நேற்று  முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் ஆனந்த், செந்தில் ஆகியோர் மீது 3  பிரிவுகளின்கீழ் வழக்குபதிந்த எஸ்ஐ முருகன் தலைமையிலான போலீசார் இருவரையும்  பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எந்தவித முன்விரோதம்  இல்லாத நிலையில் திலகரின் குழந்தைகளை வீடுபுகுந்து இருவரும் போதையில் தாக்க  வேண்டிய அவசியம் என்ன? என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று  வருகிறது.

Related Stories: