×

மக்களுக்கு சாதகமாக செயல்படாத நிலையில் எடப்பாடி அரசு ராஜினாமா செய்ய வேண்டும்

கடலூர், நவ. 22: மத்திய, மாநில அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தென்பெண்ணை ஆற்றில் திட்டங்களை தடுத்து நிறுத்துவதில் தோல்விகண்ட அதிமுக அரசை கண்டித்து கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகில் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன், எம்எல்ஏக்கள் சரவணன், சபா ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய, மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் தற்போது மக்களுக்கான அரசாக செயல்பட்டு வருகிறதா என்பது மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துறையின்கீழ் பொதுப்பணித்துறை செயல்பட்டு வருகிறது. ஆனால் இத்துறை  சார்பாக உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா சார்பில் தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சரியான முறையில் வழக்கில் வாதாடாததால்  தற்போது தடுப்பணை கட்டுவதற்கு தடை இல்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஆனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் தமிழக அரசு திறமையான வகையில் வாதாடி வருகிறது. மக்களின் அடிப்படை தேவையான தண்ணீர் பிரச்னையில் தமிழக அரசு மக்களுக்கு சாதகமாக செயல்படாத நிலையில் இதற்கு தார்மீக பொறுப்பேற்று எடப்பாடி அரசு ராஜினாமா செய்ய வேண்டும்.

பிரதமர் மோடி ஆசீர்வாதத்தால் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக தடுப்பணைகள் கட்டுவதற்கு தமிழக அரசு உடந்தையாக இருப்பதாக அனைவரின் சந்தேகமும் எழுந்துள்ளது. இதுபோன்ற நிலையில் அவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் வருகின்ற உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்றார்.ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன், மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, மாணவரணி நடராஜன், பொதுக்குழு பாலமுருகன், இளைஞரணி சுந்தர், மீனவரணி தமிழரசன், வழக்கறிஞர் அணி சிவராஜ், வனராசு, விஆர் அறக்கட்டளை திமுக பிரமுகர் விஜயசுந்தரம், தொண்டரணி கதிர்காமன், தென்னரசு, நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, சலீம், பாலாஜி, அகஸ்டின், கார்த்திக், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஞானசேகரன், பாரிவள்ளல், தொமுச பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். கடலூர் நகர செயலாளர் ராஜா நன்றி கூறினார்.


Tags : government ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...