புதுச்சேரி, நவ. 20: புதுவை ஜீவானந்தம் அரசு மேனிலை பள்ளியில் மண்டல மற்றும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியை முதல்வர் நாராயணசாமி, கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
‘நிலையான வளர்ச்சிக்கு அறிவியலும் தொழில்நுட்பமும்’ என்ற முதன்மை தலைப்பில், நிலையான விவசாய செயல்முறைகள், சுகாதாரமும் உடல்நலமும், வள மேலாண்மை, தொழில் துறை வளர்ச்சி, வருங்கால போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு, கல்விசார் விளையாட்டுகள் மற்றும் கணித மாதிரிகள் போன்ற துணை தலைப்புகளில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் 349 அறிவியல் படைப்புகள், இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.