பேன்சி எண்கள் ஏலம் 22ம் தேதி பதிவு துவக்கம்

புதுச்சேரி, நவ. 20:  புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி போக்குவரத்து துறையின் பிஒய்-05 ஜே (உழவர்கரை) வரிசையில் உள்ள பேன்சி எண்களை https://parivahan.gov.in/fancy என்ற இணையதளத்தில் வரும் 22ம் தேதி காலை 11 மணி முதல் 29ம் தேதி மாலை 4.30 மணி வரை ஏலம் விட இருக்கிறது. இந்த ஏலத்தில் பங்கு பெறுவதற்கு தேவையான பெயர் மற்றும் கடவு சொல்லை மேற்கண்ட இணையதளத்தில் `நியு பப்ளிக் யூசர்’ மூலமாக வரும் 22ம் தேதி முதல் 27ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு பதிவு செய்தவர்கள் மட்டுமே வரும் 28ம் தேதி காலை 10 மணி முதல் 29ம் தேதி மாலை 4.30 மணி வரை ஏலத்தில் பங்கு பெறலாம்.

இந்த மின் ஏல முறையில் பங்குபெற விரும்பும் பொதுமக்கள், அதற்கான வழிமுறைகள் மற்றும் ஏல நிபந்தனைகளை வரும் 22ம் தேதி முதல் transport.py.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்தும், பதிவு இறக்கமும் செய்து கொள்ளலாம். விண்ணப்ப தொகையின் விவரம் இஎம்டியின் விவரம், ஏல நிபந்தனைகள் குறித்த விவரங்கள் மற்றும் இது சம்பந்தமான இதர விவரங்களை போக்குவரத்து துறை அலுவலகத்திலும் தெரிந்து கொள்ளலாம். இந்த ஏலம் சம்பந்தப்பட்ட பண பரிவர்த்தனை அனைத்தும் ஆன்லைன் பேமண்ட் மூலம் இணையதளம் வாயிலாக மட்டும் பெறப்படும். நேரிலோ மற்றும் காசோலையாகவோ ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: