விழுப்புரம், நவ. 20: விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும், வேலைவாய்ப்பு வெள்ளி என்ற தலைப்பின் கீழ் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்முகாமில் ஏப்ரல் மாதம் 2018 முதல் அக்டோபர் 2019 வரை 384 தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு பல்வேறு பணியிடங்களுக்கு 9,170 பேரை தேர்வு செய்துள்ளனர். இந்தவாரத்திற்கான முகாம் வரும் 22ம் தேதி விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடக்கிறது. இதில் பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும், இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் நடத்தப்படும் பல்வேறு திறன் பயிற்சிகளுக்கான சேர்க்கை நடக்கிறது. இம்முகாமில் பங்கேற்க விரும்பும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், தங்களின் கல்விச்சான்றிதழ்கள் மற்றும் சுயவிவரங்களுடன் கலந்து கொண்டு பயனடையலாம். 10, 12, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்த இளைஞர்கள் முகாமில் பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.