குளித்தலை, நவ. 20: குளித்தலை அடுத்த அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் விரைவில் ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர் மலையில் சிறப்பு மக்கள் குறைதீர் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். எஸ்பி பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், திட்ட அலுவலர் கவிதா, சார் ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 859 பயனாளிகளுக்கு ரூ.7 கோடி 34 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பில் நலத்திட்டங்களை வழங்கி பேசியதாவது:
கரூர் மாவட்டத்தில் இரண்டு இடத்தில் விவசாயிகள் நலன் கருதி புதிய தடுப்பணைகள் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கு முதல்கட்ட ஆய்வு பணிக்காக ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பணி விரைவில் தொடங்கும். அதேபோல் குளித்தலை நகரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு முதல்வரின் அனுமதிக்காக வைக்கப்பட்டுள்ளது. அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ரோப்கார் திட்டம் விரைவில் செயல்படுத்த அறநிலையத்துறை அமைச்சரை அணுகி அதற்கான பணிகள் முடுக்கி விடப்படும் பொதுமக்கள், பக்தர்கள் நலன் கருதி அய்யர்மலை கிரிவல பாதையில் ரூபாய் ஒரு கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை, எல்இடி விளக்குகள் பொருத்த திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றார்.நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பாப்பா சுந்தரம், ஒன்றிய செயலாளர் விநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டாட்சியர் மகாமுனி நன்றி கூறினார்.