திருவையாறு, நவ. 20: திருவையாறு அருகே நடந்த தொழிலாளி கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருவையாறு அடுத்த அம்மன்பேட்டை தெற்குத்தெருவை சேர்ந்த விவசாய தொழிலாளி டென்னீஸ் ராஜ் (38). இவருக்கு திருமணமாகி சூர்யா என்ற மனைவியும், கார்ட்வின் (9) என்ற மகனும், கரன்சியா (7) என்ற மகளும் உள்ளனர். கடந்த 17ம் தேதி இரவு டென்னீஸ்ராஜ் மற்றும் அதே ஊரை சேர்ந்த வக்கீல் சுதாகர் (40) ஆகியோர் விஏஓ அலுவலகம் அருகே பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் சரமாரியாக டென்னீஸ்ராஜை அரிவாளால் வெட்டியது. இதை தடுத்த சுதாகருக்கும் வெட்டு காயம் ஏற்பட்டது. இதில் டென்னீஸ்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து சுதாகர் கொடுத்த புகாரின்பேரில் நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிந்து குற்றவாளியான அம்மன்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த ஜெந்திரஜினி (எ) பாவா (19), காட்டுராஜா (26), சிவசக்தி (19), மணிசங்கர் (19) ஆகிய 4 பேரையும் கைது செய்து தஞ்சை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து 4 பேரையும் டிசம்பர் 3ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் 4 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை நடுக்காவேரி போலீசார் தேடி வருகின்றனர்.