திருச்சி, நவ. 20: திருச்சி பெல் வளாகத்திலுள்ள பள்ளியில் சுகாதாரமற்ற கழிவறையால் மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர். திருச்சி பெல் வளாகத்தில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு திருவெறும்பூர், துவாக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் கழிவறை பராமரிப்பின்றி, கேடு விளைவிக்கும் வகையில் துர்நாற்றத்துடன் உள்ளதாக மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் கழிவறையை மாணவிகள் பயன்படுத்த முடியாத அவலம் நீடித்து வருகிறது. அவசரத்துக்கு ஒதுங்கினால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. பள்ளியில் குடிநீர், கழிவறை, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாதது வேதனை அளிக்கிறது. மாணவிகள் மட்டுமே படித்து வரும் நிலையில் கழிவறைக்கு வெளியிலும் செல்லமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர் உடனடியாக பள்ளியில் ஆய்வு செய்து சுகாதாரமான கழிவறை அமைக்க உத்தரவிட வேண்டும் என மாணவிகள், பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து மாணவிகளின் பெற்றோர் கூறுகையில், பள்ளியில் கல்வி கட்டணங்களை முறையாக பெற்றுக்கொள்கின்றனர். ஆனால், குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவதில்லை. மாணவிகள் கழிவறை செல்லாமல் சிரமப்படுவதால் உடல் அளவில் பாதிக்கப்படுகின்றனர். அப்படி கழிவறைக்கு சென்றாலும் நோய் தொற்றால் அவதிக்குள்ளாகிவருகின்றனர். எனவே உடனடியாக கழிவறை ஆய்வு செய்து பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.