விருதுநகர், நவ. 20: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஜோகில்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பந்தனேந்தல் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், பந்தனேந்தலிலிருந்து ஜோகில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல காலை, மாலை நேரங்களில் உரிய நேரத்துக்கு பஸ் வருவதில்லை. பந்தனேந்தலில் காலை நேரத்தில் 11.30 மணிக்கு பஸ் வருவதால் மாணவ, மாணவியர் தினசரி 4 கி.மீ தூரம் நடந்து பள்ளிக்கு செல்கின்றனர். இதனால், மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், பந்தனேந்தல் கிராமத்தில் இருந்து ஜோகில்பட்டிக்கு பள்ளி நேரங்களில் அரசு பஸ் இயக்க வேண்டும் என மாணவர்கள் நேற்று விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.