சிவகங்கை, நவ. 20: சிவகங்கையில் சுய வேலைவாய்ப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நவ.22ல் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசால் செயல்படுத்தப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மானியத் திட்டங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கும் சுயவேலைவாய்ப்பு திட்டங்கள், ஒற்றைச் சாளரத் தீர்வுக்குழு கூட்டம், இந்த நிறுவனங்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் விழிப்புணர்வு முகாம் இன்று (நவ.20) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக முகாம் நவ.22ம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அன்று காலை 10 மணியளவில் சிவகங்கை தொண்டி ரோட்டில் உள்ள தனியார் மகாலில் நடக்க உள்ளது.
சுயவேலைவாய்ப்பு குறித்து அறிய விரும்பும் தொழில் முனைவோர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் பயனடையும் வகையில் அவர்களுக்கான வாய்ப்புகள் குறித்து வங்கியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் தொழில் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விபரங்கள் வழங்க உள்ளனர். கூடுதல் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிவகங்கை என்ற முகவரி அல்லது 04575-240257 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.