சென்னை, நவ.20: சென்னை புறநகர் பகுதிகளில் முக்கிய நீர்நிலைகளில் சிட்லப்பாக்கம் ஏரியும் ஒன்று. இந்த ஏரி பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்த ஏரி குரோம்பேட்டை, சிட்லப்பாக்கம், அஸ்தினாபுரம் உள்ளிட்ட பகுதி மக்களின் நிலத்தடிநீர் ஆதாரமாக விளங்கியது. இந்நிலையில், தற்போது ஆக்கிரமிப்புகள் காரணமாக ஏரியின் பரப்பளவு 47 ஏக்கராக சுருங்கி காணப்படுகிறது. மேலும், வீடுகளின் கழிவுநீர் ஏரியில் விடப்படுவதால் தற்போது ஏரி நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஏரியை தூர்வார வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், பொதுப்பணித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பொதுமக்கள் நேரடியாக களத்தில் இறங்கி தூர்வாரும் பணியை மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் சிட்லப்பாக்கம் ஏரியில் 25 கோடி செலவில் புனரமைப்பு பணி ேமற்கொள்ளப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதை தொடர்ந்து தற்போது இப்பணிக்கு 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சுற்றுச்சூழல் துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளார்.