சேலம், நவ.20: சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கூட்டுறவு கடன் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்திற்கு 4529 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும், 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் செயல்படுகின்றன. மத்திய கூட்டுறவு வங்கிகள், மக்களிடம் இருந்து பெறும் டெபாசிட் தொகை, மாநில தலைமை கூட்டுறவு வங்கியிடம் இருந்து பெறும் கடன் ஆகியவை வாயிலாக நிதி ஆதாரத்தை பெறுகின்றன. மத்திய கூட்டுறவு வங்கியிடம் இருந்து பெறும் தொகையை வைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களும் நிதி ஆதாரத்தை ஈட்டுகின்றன. அதில், சிறுவணிக கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், தங்கம் மீதான கடன், பயிர் கடன் என பல வகையான கடன்களை வழங்குகின்றன. இந்த மத்திய கூட்டுறவு வங்கிகளிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் அதிக எண்ணிக்கையில் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங்களை நிரப்ப கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, அந்தந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்ககிளிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு துறையின் ஆள் சேர்ப்பு நிலையத்தால் நியமிக்கப்பட உள்ளது.