நாமக்கல், நவ.20: 10, 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை இலக்காக வைத்து ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டுமென பாராட்டு சான்றிதழ் வழங்கி கல்வி அதிகாரி அறிவுறுத்தினார். நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றது. இதையொட்டி, 10ம் வகுப்பு பாட ஆசிரியைகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை பார்வதி வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், ஆசிரியைகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசியதாவது: நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்ற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக திகழவேண்டும். சிறந்த தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் இங்கு பணியாற்றுகிறார்கள். அதனால் தான், கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த கல்வியாண்டிலும் அந்த சாதனை 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்விலும் சேர்த்து தொடர வேண்டும். அதை இலக்காக வைத்து இப்போதில் இருந்தே ஆசிரிய, ஆசிரியைகள் பணியாற்றவேண்டும். அதற்கேற்ப மாணவியர் அனைவரும் நல்லமுறையில் படிக்கவேண்டும். ஒரு மாணவனோ, மாணவியோ ஒரு தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியிருந்தால், அவர் தோல்வி அடைந்தவர் என நினைக்ககூடாது.