குன்னூர், நவ.20: குன்னூர் குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் மின்னல் மற்றும் இடி தாக்கி புல் தரைகளை புரட்டி போட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.குன்னூர் அருகே கன்டோன்மென்ட்டுக்கு உட்பட்ட சின்ன வண்டி சோலை பகுதியில் குடியிருப்பு அருகே நள்ளிரவில் இடி மற்றும் மின்னல் தாக்கி அங்குள்ள புல் தரைகள் மற்றும் மரங்கள் சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இருந்த போதிலும் இது வரை கன்டோன்மென்ட் அதிகாரிகளோ உறுப்பினர்களோ பாதிப்பு ஏற்பட்ட இடத்திற்கு வர வில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.