கோவை, நவ. 20: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து கோவை தி.மு.க.வில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 700 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். கோவை மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கு விருப்ப மனு படிவம் வழங்கும் நிகழ்ச்சி கிராஸ்கட் ரோட்டில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கடந்த 13ம் தேதி நடந்தது. இவற்றை பூர்த்தி செய்து, அதற்குரிய கட்டணங்களுடன், மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் துவங்கியது. மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டார். மேயர் பதவிக்கு ேபாட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள், ரூ.50 ஆயிரம் கட்டணம், கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள், ரூ.10 ஆயிரம் கட்டணம் செலுத்தினர்.
இதேபோல், கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட செயலாளர் சி.ஆர். ராமச்சந்திரன் விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டார். ஆண்கள், பெண்கள் என பலரும் ேபாட்டி போட்டுக்கொண்டு விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 700 பேர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். நேற்று யாரும் விருப்ப மனு அளிக்கவில்லை. விடுபட்டவர்கள் இன்று விருப்ப மனு அளிக்க உள்ளனர். நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட திமுக பொறுப்பு குழு உறுப்பினர் பி.நாச்சிமுத்து, முன்னாள் கவுன்சிலர்கள் முருகன், கார்த்திக் செல்வராஜ், அம்சவேணி செல்வராஜ் மற்றும் குனிசை லோகு, மாணவர் அணி வெங்கடேசன், உமாமகேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.