ஈரோடு, நவ. 20: ஈரோட்டில் கால்டாக்சி ஓட்டுநரை அடித்து உதைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்பி.,யிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. ஈரோடு பெரியசேமூர் நந்தவனத்தோட்டம் பகுதியை சம்சுதீன் மகன் நவாஸ் (20), சாதிக்பாட்ஷா மகன் ஆரோன் (17) ஆகியோர் கடந்த 15ம் தேதி சித்தோட்டில் இருந்து ஈரோடு நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தனர். நரிப்பள்ளம் என்ற இடத்தில் வந்தபோது, அந்த வழியாக வந்த கால்டாக்சி ஒன்று எதிர்பாராதவிதமாக நவாஸ், ஆரோன் வந்த பைக்கின் மீது மோதியது. இந்த விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நவாஸ், ஆரோன் நண்பர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து ஏற்படுத்திய கால்டாக்சி டிரைவரான துரைராஜ் மற்றும் அவர் ஓட்டி வந்த காரையும் அடித்து உதைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.