உடன்குடி,நவ.20: தாண்டவன்காடு கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடையை அப்புறப்படுத்தி புதிய கட்டிடம் கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடன்குடி யூனியன் மாதவன்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட தாண்டவன்காட்டில் 150க்கும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களின் பயன்பாட்டிற்கென கடந்த 20ஆண்டுகளுக்கு முன்னர் ஓடுகளால் கூரைவேயப்பட்ட பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டது. தற்போது பஸ் ஸ்டாப்பின் கட்டிடம் சுற்று சுவர் வெடித்து முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. தற்போது பரவலாக மழை பெய்வதால் பயணிகள் நிழற்குடை அபாய நிலையில் காணப்படுகிறது. எனவே விபரீதம் நிகழும்முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்கூடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சேர்மத்துரை கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.