×

கண்ணமங்கலம் அருகே கிபி 10ம் நூற்றாண்டு ‘விஷ்ணு துர்க்கையம்மன்'கற்சிற்பம் கண்டெடுப்பு வயல்வெளியில் சாய்ந்த நிலையில் உள்ளது

கண்ணமங்கலம், நவ.20: கண்ணமங்கலம் அருகே வயல்வெளியில் சாய்ந்த நிலையில் கி.பி. 10ம் நூற்றாண்டு `விஷ்ணு துர்க்கையம்மன்' கற்சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த வெல்லூர் கிராமத்தில் சம்புவராயர் ஆய்வு மையம் சார்பில் முனைவர் அமுல்ராஜ், வரலாற்று ஆய்வாளர் விஜயன், சமூக ஆர்வலர் பீமன் ஆகியோர் நேற்று முன்தினம் வரலாற்று தடயங்கள் குறித்த களஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள வயல்வெளியில் சாய்ந்த நிலையில் இருந்த ‘விஷ்ணு துர்க்கையம்மன்' கற்சிற்பம் ஒன்றை கண்டெடுத்தனர்.இதுகுறித்து அமுல்ராஜ் கூறுகையில், `இந்த கற்சிற்பத்தில் காணப்படும் உருவம் விஷ்ணுவின் தங்கையான ‘விஷ்ணு துர்க்கையம்மன்' ஆகும். நான்கு கரங்களுடன் சுமார் 4 அடி உயரம், 2 அடி அகலத்தில் சாய்ந்த நிலையில் காணப்படும் சிற்பத்தின் முகம் சிதைந்த நிலையில் உள்ளது. தலையில் கூம்பு வடிவ கிரீடம் காணப்படுகிறது.

வலது பின்கரத்தில் சங்கும், முன்கரம் அபய முத்திரை தாங்கியுள்ளது. இடது பின்கரத்தில் சக்கரமும், முன்கரம் தொடைமீது வைத்த நிலையிலும் உள்ளது. கழுத்தில் நாற்புரி கழுத்தணி மாலையும், காதுகளில் காதணியும் உள்ளது. இடுப்பில் இருந்து தொடைவரை நீண்ட அமைப்பிலான ஆடை உள்ளது. வலது புறமாக ஆடை முடிப்பு காட்டப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி.10 நூற்றாண்டாகும்'' என்றார்.மேலும், வரலாற்று ஆய்வாளர் விஜயன் கூறுகையில், ‘கண்ணமங்கலம் அடுத்த படைவீடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை கண்டறியப்பட்ட நடுகற்கள், சிற்பங்கள் யாவும் சம்புவராயர் காலத்தை சேர்ந்தவையாகும். ஆனால், இந்த கற்சிற்பம் அதற்கு முந்தையதாகும். வயல்வெளிகளில் காணப்படும் இத்தகைய அரிய வரலாற்று சிற்பங்களை எல்லாம் ஓரிடத்தில் பாதுகாக்க அரசு சார்பில் படைவீட்டில் ‘அருங்காட்சியகம்' ஒன்று அமைத்து கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்' என்றார்.

Tags : exhibition ,Kannamangalam ,Vishnu Durgaayammannu ,
× RELATED சென்னையின் முதல் பேனா கண்காட்சி!