திருச்சி, நவ.19: சாலையில் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படுவதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருச்சி மாவட்டக்குழு சார்பில், மாடு, கன்றுடன் திருச்சி மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளிக்க வந்தனர்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் சுரேஷ், செயலாளர் லெனின் தலைமையில் வந்த நிர்வாகிகள் மாநகராட்சி அலுவலகத்தில் அளித்த மனுவில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் டூ வீலர்களை நிறுத்த மேற்கூரை பாதுகாப்பு வசதிகள் எவையும் ஏற்படுத்தாமல், அந்த பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பெயரால், மணி நேரத்திற்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்தவேண்டும். பெரும் வணிக நிறுவனங்கள் உள்ள பகுதியில் வாடிக்கையாளர்களுக்கு வாகனம் நிறுத்த வசதியை செய்து தராத உரிமையாளர்களுக்கு கட்டிடம் கட்ட அனுமதி வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.மேலும் மாநகர பகுதி சாலைகளில் கூட்டம், கூட்டமாக மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து, அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சத்திரம் பஸ் நிலையம் சென்றனர். அங்கு வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கட்டணம் வசூலித்த 2 பேரிடம் இருந்த மெஷினை பறித்தனர். தொடர்ந்து சாலைமறியல் போராட்டம் நடத்த முயன்றனர். அப்ேபாது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் சண்முகவேல், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.