திருச்சி, நவ.18: பெங்களூர் சிறையில் இருந்து அழைத்து வரப்படும் முருகனை இன்று திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றப்பிரிவு போலீசார் கஷ்டடி கேட்டு மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த அக்.2ம் தேதி சுவரை துளையிட்டு ₹13 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. விசாரணையில் திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த முருகன் தலைமையிலான கும்பல் இக்கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக திருவாரூர் மடப்புரம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த மணிகண்டன், முருகனின் சகோதரி கனகவல்லி, மதுரையை சேர்ந்த கணேசன் ஆகியோரை போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.முக்கிய குற்றவாளிகளான கனகவல்லியின் மகன் சுரேஷ் கடந்த அக்.9ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்திலும், முருகன் அக்.11ம் தேதி பெங்களூரு 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். அன்றைய தினமே பெங்களூரு போலீசார் முருகனை கஸ்டடி எடுத்து தொடர்ச்சியாக விசாரித்தனர். மேலும் திருச்சிக்கும் அழைத்து வந்து ஆற்றங்கரையில் புதைத்து வைத்திருந்த சுமார் 12 கிலோ நகைகளை பறிமுதல் செய்தனர். கடந்த 12ம் தேதி கஸ்டடி முடிந்த நிலையில் பெங்களூரு போலீசார் முருகனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.