×

புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும்

புதுக்கோட்டை, நவ.19: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்,கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமையில் நடந்தது.கூட்டத்தில் திருமயம் தாலுகா குலமங்கலம் இளம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் அனைவரும் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த ஏழை மக்கள். எங்களுக்கு என்று நிரந்தர தொழிலும், நிரந்தர வருமானமும் கிடையாது. இதனால் நாங்கள் கூலி வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வருகிறோம். எங்களுக்கு தமிழக அரசால் 1989ம் ஆண்டு காலனி வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது.மேற்படி வீடுகள் தற்போது இடிந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இருப்பினும் நாங்கள் தங்குவதற்கு வேறு வீடு இல்லாததால், வேறுவழியின்றி அதே வீட்டில் வசித்து வருகிறோம். எனவே கலெக்டர் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த வீடுகளை இடித்து அகற்றிவிட்டு, அதே இடத்தில் எங்களுக்கு புதிய வீடுகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

கந்தர்வகோட்டை தாலுகா காட்டுநாவல் பெரியார்நகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், பெரியார் நகரில் கடந்த மே மாதம் 7ம் தேதி இரவு கடந்த 1985 ஆண்டு கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி இடிந்து விழுந்தது. இந்த குடிநீர் தொட்டி இரவில் இடிந்து விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நாங்கள் பலமுறை மனு கொடுத்தும், இதுவரை எங்கள் பகுதியில் புதிய குடிநீர் தொட்டி அமைக்க அதிகாரிகள் எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் எங்கள் பகுதியில் மழைக்காலங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஒரு சிலர் பணம் கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே இதுகுறித்து கலெக்டர் உடனே நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியில் புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டிடத்தர வேண்டும் எனக் கூறிருந்தனர்.

கூட்டத்தில் அகில பாரத இந்து மகா சபா மகளிரணி சார்பில் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை-மலையடிப்பட்டி செல்லும் அரசு டவுன் பஸ் ஒவ்வொரு நாளும் காலை 7.30 மணிக்கு புதுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு, நமணசமுத்திரம், நச்சாந்துப்பட்டி, மலையக்கோவில் விலக்கு, மலையக்கோவில், மாங்குறிச்சிபட்டி, புதுக்குறிச்சிவயல் குடியிருப்பு வழியாக ராராபுரம் சென்று, பின்னர் அங்கிருந்து குலமங்கலம் வழியாக பனையப்பட்டி, குழிபிறை, செவலூர் வழியாக மலையடிப்பட்டி செல்லும்.
பின்னர் அங்கிருந்து புதுக்கோட்டைக்கு செல்லும். தற்போது இந்த டவுன் பஸ் மலையக்கோவில், மாங்குறிச்சிப்பட்டி, புதுக்குறிச்சிவயல் வழியாக செல்வதில்லை. எனவே இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட அரசு பஸ் மலையக்கோவில், மாங்குறிச்சிப்பட்டி, புதுக்குறிச்சிவயல் வழியாக செல்ல வழிவகை செய்ய வேண்டும் எனக்கூறியிருந்தனர்.

Tags : houses ,
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்