×

விவசாயிகளுக்கு நீதி கேட்டு க.பரமத்தியில் ஆர்ப்பாட்டம்

க.பரமத்தி, நவ. 19: உயர்மின் கோபுரம் அமைப்பதை உடனடியாக கைவிட்டு மாற்று பாதையில் சாலையோரமாக கேபிள் அமைத்து மட்டுமே செயல்படுத்திட மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.  க.பரமத்தி கடைவீதியில் உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் விவசாய பிரிவு மாநில செயலாளருமான ராஜ்குமார் தலைமை வகித்தார்.தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பொன்னுசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கந்தசாமி, சிஐடியூ சங்க கரூர் மாவட்ட செயலாளர் முருகேசன், நொய்யல் வாய்க்கால் விவசாயிகள் சங்க தலைவர் நொய்யல் ராமசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் இலக்குவன், மாவட்ட துணைத்தலைவர் சக்திவேல், நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் நன்மாறன், முன்னாள் க.பரமத்தி ஒன்றியக்குழு தலைவர் குப்புசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் தேவராஜ், நல்லசிவம், சாமானிய மக்கள் கட்சி நிர்வாகி குணசேகரன், மதிமுக ஒன்றிய நிர்வாகி சண்முகம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்

இதில் உயர்மின் கோபுரம் அமைப்பதை உடனடியாக கைவிட்டு மாற்று பாதையில் சாலையோரமாக கேபிள் அமைத்து மட்டுமே செயல்படுத்திட மத்திய மாநில அரசுகள் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். நிலத்தை இழக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் 2013ம் ஆண்டு புதிய நிலம் எடுப்பு சட்டத்தின்படி நிலத்தின் முழு மதிப்பிழப்பை சந்தை விலையில் நிர்ணயம் செய்து நான்கு மடங்கு வழங்கிட வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்டு மின்சாரம் சென்று கொண்டிருக்கும் திட்டங்களுக்கு கோபுரம் அமைந்துள்ள இடத்திற்கும் கம்பி செல்லும் இடத்திற்கும் மாத வாடகை நிர்ணயித்து வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டு இயக்கத்தோடு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நான்கு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனவே தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். நிறைவில் கருக்கம்பாளையம் ராஜாமணி நன்றி கூறினார்.

Tags : Protests ,
× RELATED சங்கரன்கோவிலில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்