அரவக்குறிச்சி, நவ. 19: அரவக்குறிச்சி ஒன்றியம் ஈசநத்தத்தில் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காணப்படும் பள்ளிவாசல் தெரு சாலையை சீரமைக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரவக்குறிச்சி ஒன்றியம் ஈசநத்தத்தில் ஊரின் நடுவிலுள்ள முக்கியமானது பள்ளிவாசல் தெரு சாலை. இச்சாலையில் 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் உள்ளது. இந்த சாலையை கடந்து தான் பள்ளிவாசல் தெரு மற்றும் ஊரின் நடுப்பகுதியிலுள்ள 400க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள், கடை வீதிக்கு பொருள்கள் வாங்குவதற்கும், பள்ளிக்கு மாணவ மாணவிகள் வந்து செல்வதற்கும், வெளியூருக்கு செல்ல பேருந்து நிறுத்தத்திற்கு வந்து செல்வதற்கும் இந்த சாலை முக்கியமாக உள்ளது.
மழை காலங்களில் தண்ணீர் அதிக அளவில் தேங்கியும், மேடான பகுதியில் இருந்து மழை நீரில் அடித்து கொண்டு வரும் சகதி தேங்கியும் வருகின்றது. இதனால் இச்சாலையை கடந்து செல்ல வேண்டிய மக்கள் நடந்தோ, டூவீலரிலோ கூட செல்ல முடியாத அவலமான சூழ்நிலை உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தான் வரும் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடியும் அமைய உள்ளது. தேர்தலுக்கு முதல் நாள் மழை வந்தால் இங்கு வாக்காளர்கள் வாக்களிக்க வருவதற்கு சிரமமான நிலை உள்ளது. பல முறை கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே அரவக்குறிச்சி ஒன்றியம் ஈசநத்தத்தில் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காணப்படும் பள்ளிவாசல் தெரு சாலையை சீரமைக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.