×

கூட்டு பண்ணைய கண்டுணர்வு சுற்றுலா

திருவையாறு, நவ. 19: திருவையாறு வட்டாரத்தில் வேளாண்மைத்துறை சார்பில் வேளாண்மை உதவி இயக்குனர் சரசு வழிகாட்டுதலின்படி அட்மா திட்டத்தின்கீழ் கூட்டு பண்ணையம் குறித்த மாநில அளவிலான கண்டுணர்வு சுற்றுலா நடந்தது. திருவையாறு வட்டாரத்தை சேர்ந்த 50 விவசாயிகளை புதுகோட்டை மாவட்டம் இலுப்பூர் கிராமத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் புதுகோட்டை இயற்கை வேளாண்மை உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு அழைத்து சென்றனர்.
கூட்டு பண்ணைய திட்டத்தின் முக்கியத்துவம், கூட்டு விவசாய முறைகள், வேளாண்மை உற்பத்தியாளர் நிறுவனம் அமைக்கும் முறை, செயல்திட்டங்கள், உற்பத்தியாளர் நிறுவனத்தினால் விவசாயிகளுக்கு கிடைக்கும் பயன்கள் குறித்து
இலுப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர் நிறுவன முதன்மை செயலாளர் தட்சிணாமூர்த்தி விளக்கி கூறினார். மேலும் பண்ணை சார்ந்த தொழில்களான கறவைமாடு வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள இடர்பாடுகள் குறித்து விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து பேசினார்.

இடுபொருட்களின் செலவை குறைக்க இயற்கை வேளாண்மை முறை, பயன்கள் மற்றும் முக்கியத்துவம் குறித்து புதுக்கோட்டை இயற்கை வேளாண்மை உற்பத்தியாளர் நிறுவன முதன்மை செயலாளர் அகிலா விளக்கம் அளித்தார். இயற்கை வேளாண்மை பொருட்களை சந்தைபடுத்துவதில் இருக்கும் சிரமங்களை தவிர்க்க பொருள் மதிப்புக்கூட்டுதல் முறை, பயன் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. விவசாயிகளை கண்டுணர்வு சுற்றுலாவாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் மாதாலெட்சுமி, உதவி வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் வெங்கடேசன். பிருந்தா அழைத்து சென்றனர்.

Tags : Joint Farm ,
× RELATED ஒருங்கிணைந்த கூட்டுப் பண்ணையில் அசத்தும் பெண் ஊராட்சி தலைவர்