குமாரபாளையம், நவ.19: மலேசியாவில் நடைபெற்ற உலக கோப்பை சிலம்பாட்ட போட்டியில், குமாரபாளையம் நடராஜா கல்லூரி மாணவர் 3 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். மலேசியாவில் உள்ள கடா மாநிலத்தில், உலக சிலம்பாட்ட சம்மேளனம் சார்பில் முதலாவது உலக கோப்பை சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. நெடுங்கம்பு, நடுகம்பு, ஒற்றை வாள், இரட்டைவாள், ஒற்றை சுருள்வாள், மடுவு, கம்பு ஜோடி, குழு ஆயுதவீச்சு, கம்பு சண்டை ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. ஒரு வீரர் 3 போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இந்த போட்டிகளில் இந்தியா, மலேசியா, பங்களாதேஷ், கம்போடியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, 400க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்திய அணியில் பங்கேற்ற குமாரபாளையம் ஜேகேகே நடராஜா கலை அறிவியல் கல்லூரி 3ம் ஆண்டு மாணவர் கார்த்திக்ராஜா, இரட்டை கம்பு, குழு ஆயுதவீச்சு, கம்பு சண்டை ஆகிய போட்டிகளில் பங்கேற்று, 3 தங்கப்பதக்கங்களை பெற்றார். சர்வதேச அளவில் சாதனை படைத்த மாணவரை, நடராஜா கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா, கல்லூரி முதன்மையர் பரமேஸ்வரி, முதல்வர் சரஸ்வதி, உடற்கல்வி இயக்குனர் அனிதா ஆகியோர் பாராட்டினர்.