பிறந்து 10 நாளே ஆன பெண் குழந்தையை போட்டுவிட்டு தப்பி ஓடிய இளம்பெண்

உளுந்தூர்பேட்டை, நவ. 19: உளுந்தூர்பேட்டையில் திருச்சி நெடுஞ்சாலை செல்லும் சாலையில் ஒரு சித்தர் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்துக்கு நேற்று காலை வந்த ஒரு இளம் பெண் பிறந்து 10 நாளே ஆன பெண் குழந்தையை அங்கிருந்த ஒரு மூதாட்டியிடம் குழந்தையை கொடுத்துவிட்டு கழிவறைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பிறகு சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் ஆகியும் அந்த பெண் வராததால் அங்கிருந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்து குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுத்துள்ளனர். பின்னர் அங்கிருந்தவர்கள் உளுந்தூர்பேட்டை சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த சைல்டு லைன் அமைப்பை சேர்ந்த சந்தோஷ்குமார், ஜெயமாலினி, சந்திரலேகா உள்ளிட்ட குழுவினர் அந்த பெண் குழந்தையை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று சேர்த்து அங்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தையை பெண் ஒருவர் ஆசிரமத்தில் கொடுத்துவிட்டு அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்ற சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: