நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது ஆர்டிஓ சீல் வைத்த குடிநீர் கம்பெனி அதிகாரிகள் துணையுடன் மீண்டும் செயல்பாடு

விழுப்புரம், நவ. 19:   விழுப்புரத்தில் சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சிய புகாரில் மினரல் வாட்டர்கம்பெனிக்கு ஆர்டிஓ சீல் வைத்தார். தற்போது அவர் மாறுதலாகி சென்ற நிலையில் மீண்டும், வேறு சில அதிகாரிகள் துணையோடு கம்பெனி செயல்பட்டு வருவதாகவும், இதனால் நிலத்தடிநீர்மட்டம் குறைந்துவிட்டதால் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அமைச்சரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் தனியார் குடிநீர்சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. சட்டவிரோதமாகவும், ராட்சத இயந்திரங்களைக்கொண்டு குடிநீர்உறிஞ்சுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக தமிழகமுதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் மனு அனுப்பப்பட்டது. இதுகுறித்து ஆட்சியர் சுப்ரமணியன் ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, ஏற்கனவே இருந்த விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் குமாரவேல் தலைமையிலான அதிகாரிகள் குடிநீர்சுத்திகரிப்பு ஆலையில் ஆய்வு செய்தனர். உரிய அனுமதியில்லாததால் கம்பெனிக்கு சீல் வைத்தனர். இந்நிலையில் சில நாட்களில் மீண்டும் குடிநீர்சுத்திகரிப்பு ஆலை செயல்படத்தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காமதேனுநகர், குழந்தைவேல்நகர் குடியிருப்பு நலச்சங்கம் சார்பில் அமைச்சர் சண்முகத்திடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.

அதில், மாம்பழப்பட்டு சாலையில் செயல்பட்டு வரும் மினரல்வாட்டர் கம்பெனியில் தினமும் ஒரு லட்சத்திற்கு அதிகமான லிட்டர்தண்ணீர்களை விற்பனை செய்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே நாங்கள் கொடுத்த மனுவின் மீது விசாரணை நடத்தி சீல் வைத்து மூடிவிட்டார்கள். தற்போது அதிகாரிகள் துணையுடன் மீண்டும் அதே இடத்தில் நான்குஆழ்துளை கிணறுகளை போட்டு தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்து கொண்டிருக்கின்றனர். எங்கள் பகுதியில் நிலத்தடிநீர்மட்டம் குறைந்துவிட்டது. இதனால் மாம்பழப்பட்டு மட்டுமின்றி சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நிமிடத்திற்கு மேல்நீர்மோட்டார் போட்டு தண்ணீர் கிடைக்காத நிலையில் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம். அந்த இடத்தில் அவர்கள் மீண்டும் தண்ணீர் விற்பனை செய்வதை நிறுத்துவதற்கும், அந்தபகுதிக்கு சீல் வைத்து மூடுவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டது. மனுவை பெற்ற அமைச்சர் சண்முகம், துறை அதிகாரிகள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: