விழுப்புரம், நவ. 19: விழுப்புரம் ஆட்சியராக அண்ணாதுரை நேற்று காலை பொறுப்பேற்றுக்கொண்டார். மக்கள்குறைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார். விழுப்புரம் ஆட்சியராக இருந்த சுப்ரமணியன் தமிழ்நாடுதேர்தல் ஆணைய செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தஞ்சை ஆட்சியர் அண்ணாதுரை விழுப்புரத்திற்கு நியமிக்கப்பட்டார். 3 ஆண்டுகாலம் பணியாற்றி வந்த ஆட்சியர் சுப்ரமணியன் நேற்று முன்தினம் மாலை விழுப்புரம் மாவட்ட மக்களிடமிருந்து பிரியா விடைபெற்றார். இதனைத்தொடர்ந்து விழுப்புரத்திற்கு நியமிக்கப்பட்ட ஆட்சியர் அண்ணாதுரை நேற்று காலை பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயாபிசிங், ஊரக
வளர்ச்சி திட்டஇயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழக அரசின் உத்தரவின்படி பொறுப்பேற்றுக்கொண்டேன். விழுப்புரம் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டம், கல்விமேம்பாடு, ஊரகவளர்ச்சிதுறை மற்றும் மாவட்டத்தின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்காகவும் என்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டு தமிழகஅரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளேன். மாவட்ட மக்களின் குறைகளை உடனுக்குடன் நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.