கம்பம், நவ. 19: கம்பம் நூலக வாசகர் வட்டம் மற்றும் பாரதி தமிழ் இலக்கிய பேரவையும் இணைந்து நடத்திய 52வது தேசிய நூலக வாரவிழா கம்பம் தெற்கு நூலகத்தில் நடைபெற்றது. தொழிலதிபர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட நூலக அலுவலர் லட்சுமணபெருமாள், மருத்துவர் பூர்ணிமா, முனைவர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தனர். ஜான்சிராணி தமிழ்தாய் வாழ்த்து பாடினார். கம்பம் தெற்கு நூலக நூலகர் மணி முருகன் வரவேற்புரை ஆற்றினார்.
நம்மை உயர்த்தும் நூலகம்’ என்ற தலைப்பில், இளையவர்களின் பேச்சும், கவிஞர்கள் மற்றும் பிலாலியா அரபிக்கல்லூரி மாணவர்களின் கவிதைப்பூக்களும் நடைபெற்றது. முனைவர் மனோகரன் எழுதிய, நான் பார்த்த அந்தமான் நூலை முன்னாள் அகில இந்திய தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் கூடலூர் முருகேசன் வெளியிட, பாமக முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் பொன் காட்சிக்கண்ணன், வக்கீல் முத்துக்குமரன் பெற்றுக்கொண்டனர். சேது மாதவன் நூல் ஆய்வுரை வழங்கினார். கவிஞர் பரதன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. `கம்பம் பள்ளத்தாக்கு ஜமீன்’ தலைப்பில் பஞ்சு ராஜா, `நெடுநல்வாடையில் சங்ககால கட்டிடக்கலை’ தலைப்பில் முனைவர் அங்கயற்கண்ணி பேசினர். தருமர் நன்றி கூறினார்.