பணகுடி, நவ. 19: பணகுடியில் டெண்டர் விட்டு 4 மாதங்களாகியும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணி முடக்கத்திலேயே இருந்து வருகிறது. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். பணகுடியில் இயங்கிவரும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் நோயாளிகள் நலன்கருதி புதிதாக கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் இதற்கான டெண்டர் விட்டு கடந்த 4 மாதங்களாகியும் இன்னும் கட்டுமானப் பணிகள் துவங்கப்படாமல் முடக்கத்திலேயே உள்ளன. தற்போது மருத்துவர்கள், செவிலியர்கள் போதுமான அளவில் உள்ளபோதும் அவர்களுக்கான ஓய்வறைகள் சரியான முறையில் இல்லை எனவும் புகார் எழுந்துள்ளது.இதனிடையே ஆரம்ப சுகாதார வளாக முன்பகுதியில் ஓட்டுக்கூரையில் இயங்கிவந்த சித்த மருத்துவ சிகிச்சை மைய கட்டிடமும் பழுதடைந்தது. அத்துடன் அதில் வேயப்பட்டிருந்த ஓடுகள் ஒவ்வொன்றாக விழும் நிலையில் அதை இடித்து தள்ளிவிட்டு அதில் புதிய கட்டிடம் கட்டப்படுமா? என மக்கள் எதிர்பார்க்கும் நிலையில், வளாகத்தில் உள்ள மரங்களை அகற்றிவிட்டே கட்ட வேண்டும் என பொதுப்பணி துறை அதிகாரிக்ள கூறிவருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.