×

விவசாயத்தை போற்றும் வகையில் விவசாயிகளுக்கு பாதபூஜை

சிவகாசி, நவ. 19: சாத்தூர் அருகே, வெம்பக்கோட்டையில் ‘அன்பால் இணைவோம்’ இளைஞர்கள் நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா, பாராட்டு விழா மற்றும் விவசாயிகளுக்கு பாத பூஜை விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அன்பால் இணைவோம் இளைஞர்கள் நலச்சங்க நிறுவனர் சதிஷ்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக தேசிய குழந்தை தொழிலாளர்கள் திட்ட இயங்குநர் நாராயணசாமி, கல்லூரிப் பேராசிரியர்கள் சுந்தரம், முருகையன், சுந்தரராஜன், கற்பகா காலண்டர் உரிமையாளர் ஜெய்சங்கர், சமூக சேவகர் நாகராஜ், பாரத மாதா ஃபவுண்டேசன் மாநில ஒருங்கிணைப்பாளர் தர்மசூர்யா, நிறுவனர் ஆனந்த்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். திட்ட அறிக்கையை இளைஞர் நல சங்க நிறுவனர் சதீஷ்குமார் வாசித்தார்.

நிகழ்ச்சியில் விவசாயத்தை போற்றும் வகையில் குருவையா, பாப்பாத்தி, மாரிமுத்து, மாரியம்மாள், சின்னசுப்பையா ஆகிய விவசாய குடும்பத்தினருக்கு பாதபூஜை செய்து வழிபட்டு, பரிவட்டம் கட்டும் நிகழ்வு நடைபெற்றது. மேலும், விவசாயிகளின் பொற்கரங்களால் நெல் பிச்சை வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டு உலக சாதனைகளைப் படைத்த நடுவப்பட்டியைச் சார்ந்த காளிராஜூக்கான விருதை, அவருடைய தாயார் சுப்புலட்சுமி பெற்றுக் கொண்டார். ஏழை, எளிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கி, அவர்களின் கல்லூரி கட்டண செலவுகளை ‘அன்பால் இணைவோம்’ சார்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நாட்டுப்புற பாடல்கள், நடனங்கள் நடைபெற்றன. ஜோதிலட்சுமி, ராமசுப்பிரமணியம் மஞ்சுளாதேவி மற்றும் கௌசல்யா நன்றி கூறினர்.

Tags :
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி