மேலூர், நவ. 19: தனி தாலுகாவாக அறிவிக்க கோரி கொட்டாம்பட்டியில் பொதுமக்கள், வியாபாரிகள் சாலைமறியல், கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலூரில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயகுமார் முன்னிலையில் எம்எல்ஏ பெரியபுள்ளான் மேலூர் தாலுகாவை 2 ஆக பிரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அன்று முதல் கொட்டாம்பட்டியை தலைமையாக கொண்டு தனித்தாலுகா அமைய வேண்டும் என அப்பகுதி மக்களும், கருங்காலக்குடியை தலைமையாக கொண்டு தனித்தாலுகா அமைய வேண்டும் என அப்பகுதி மக்களும் போராட முடிவு செய்தனர். இதில் கொட்டாம்பட்டி பகுதி பொதுமக்கள், வர்த்தகர் சங்கம், கார் உரிமையாளர்கள்- ஓட்டுனர்கள் சங்கம், அரசியல் கட்சியினர் இணைந்து நேற்று முன்தினம் கொட்டாம்பட்டி காவல் நிலையம் சென்று மனு ஒன்றை அளித்தனர். அதில், கொட்டாம்பட்டியை தலைமையாக கொண்ட புதிய தாலுகா அமைக்க கோரி நவ.18 (நேற்று) கடையடைப்பு- உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என கூறியிருந்தனர். ஆனால் போலீசார் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்து விட்டனர். இதை தொடர்ந்து நேற்று கொட்டாம்பட்டி பகுதி முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடந்தது. பின்னர் பொதுமக்கள், பஸ்ஸ்டாண்ட் அருகில் தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். உடனே போலீசார் தடுத்து அவர்களை அப்புறப்படுத்தினர்.