திண்டுக்கல், நவ.19: காதல் திருமணம் செய்ததால் ஜாதி வேறுபாடு காட்டி தன்னையும், தன் கணவரையும் கொலை செய்ய முயற்சிக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தார். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தை சேர்ந்தவர் சுந்தரராஜன். தொழிலதிபரான இவரது மகள் சுருதி என்பவரும், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை காந்தி நகரைச் சேர்ந்த சோலைமலை என்பவரின் மகன் விஜயன் என்பவரும் பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஆண்டு 20.7.2018 அன்று காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சுருதியின் பெற்றோர் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 24.7.2018 அன்று குஜிலியம்பாறையிலுள்ள விஜயன் வீட்டிற்கு வந்து தகராறு செய்ததோடு, சுருதியை கரூருக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். கடந்த ஒரு வருடமாக கரூரில் சுருதியை அவரது பெற்றோர் தங்களது வீட்டில் அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.