கோவை, நவ.19: அரசியல் நிலையற்ற தன்மையை கூறும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து கூறியுள்ளது குறிப்பிட்ட நபருக்கு எதிரானது அல்ல என பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 83வது நினைவு நாளையொட்டி கோவை சிறையில் உள்ள செக்கு மற்றும் அவரது உருவ படத்திற்கு பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன் கூறியது; தமிழகத்தை பொறுத்தவரை சினிமா கலைஞர்கள், அரசியல் கட்சிகள் ஆரம்பிப்பவர்கள் மீது மக்களுக்கு ஆர்வம் இருக்கிறது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து நடிகர் ரஜினிகாந்த் அவரது கருத்தை தெரிவித்துள்ளார். யார் முதல்வராவது என்பது யார் கையில் இருக்கிறது என்ற அர்த்தத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து அவர் தெரிவித்துள்ளார்.