கோவை, நவ.19: கோவை அடுத்த காரமடையில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோவை, காரமடை அடுத்த சேரம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(65). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு வீரம்மாள் என்ற மனைவி உள்ளார். மனைவியை பிரிந்த ராஜேந்திரன் அதே பகுதியைத் சேர்ந்த கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த சந்திரா(53) என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். சந்திரா மேட்டுப்பாளையத்தில் உள்ள லாட்ஜ் ஒன்றில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். லாட்ஜுக்கு வேலைக்குச் செல்ல வேண்டாம் என ராஜேந்திரன் பலமுறைக் கூறியுள்ளார். ஆனால் சந்திரா தொடர்ந்து வேலைக்குச் சென்றுள்ளார். இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2017 ஜூன் 15ஆம் தேதி இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த ராஜேந்திரன், வேலைக்குச் செல்வது தொடர்பாக சந்திராவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதையடுத்து சந்திராவைத் தாக்கியுள்ளார்.