கோவை, நவ. 19: கோவை மாவட்டத்தில் பெய்து வரும் பருவமழையால் சிங்காநல்லூர் குளத்தில் பட்டாம் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்பகுதியில் 115 வகையான பட்டாம்பூச்சி இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கோவை சிங்காநல்லூர் குளம் நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக கோவை மாநகராட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குளம் சுமார் 288 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு, 720 வகையான பல்லுயிர்கள் வாழ்கின்றன என கண்டறியப்பட்டுள்ளது. இந்த குளத்திற்கு வெளிநாட்டு பறவைகளும் வருகின்றன. 200க்கும் மேற்பட்ட மூலிகை தாவரங்கள் உள்ளன.
இந்நிலையில், தற்போது பெய்து வரும் பருவமழையின் காரணமாக சிங்காநல்லூர் குளத்தில் பட்டாம் பூச்சிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. குளக்கரை சாலைகளில் உள்ள செடிகள், புதர்களில் பல வண்ணங்களில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாம் பூச்சிகளை காணமுடிகிறது. இப்பகுதியில் காமன் ரோஸ்(ரோஜா வண்ணத்தி), கிங் ரோஸ்(ராஜா வண்ணத்தி), மஞ்சளாத்தி, எமிகிரண்ட், பொன்னை வெள்ளையன், திட்டு வெள்ளையன், ஜோக்கர், காமன் பைலட், கரும்புள்ளி நீலன், எலுமிச்சை அழகி, காமன் காஸ்டர் உள்பட 115 வகையான பட்டாம் பூச்சி இனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.